திங்கள், 12 டிசம்பர், 2011

இந்தியர்கள் என்றாலே??????

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

இயல் இசை நாடகம்


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி