வெள்ளி, 30 மார்ச், 2012

ஷீரடி சாய் பாபா மகிமை

ஷீரடி சாய் பாபா மகிமை

கடந்த வாரம் எனது நண்பரும் அன்பு சகோதருமான ராஜபாண்டியன் அவர்கள் சாய் பாபா கோவில் பிரசாதம் என்று ஒரு அப்பம் அல்லது வட்ட வடிவ தோசை வடிவிலான ஒரு பிரசாதம் ஒன்றினை எனக்கு தந்தார்.


அந்த பிரசாதத்தினை எங்கள் வீட்டில்   ஒரு வாரம் பூஜைகள் செய்து வழிபட்டோம் அப்பிரசாதம் அதே அளவுக்கு இரண்டாக இன்று மாறிவிட்டது .


அதன் மேல் பகுதியில் துளசி இலை, செம்பருத்தி பூ , மற்றும் பாபவினுடைய காலடி தடம் தெரிந்தது மிகவும் ஆச்சரியம் ஆகவும் மெய்சிலிர்க்கும் விதமாகவும் இருக்கிறது.


இந்த விஞ்ஞான உலகில் மெய்ஞானம் இது போன்ற ஆச்சர்யங்கள்  மூலமாக தன்னுடைய நிலைப்பாட்டினை நிரூபிக்கின்றது .


இறைவன் மிகப்பெரியவன் ,
பரலோகத்தில் இருக்கும் பரம பிதா எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும்.


நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ................

எங்கும் எதிலும் ஊழல்


நாடே கெட்டு விட்டது. எங்கும் எதிலும் ஊழல், லஞ்சம் இன்றி ஒரு வேலையும் நடப்பதில்லை. எவரேனும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிடக் காவல் நிலையம் சென்றால் அவர் மீதே பல குற்றசசாட்டுகள் சுமத்தப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்படுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட எவரும் காவல் துறையை அணுக அஞ்சுகின்றனர். இத்தகைய நிலை தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமுதாயத்தில் நம்பிக்கை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பலர் ஒன்றிணைந்து தீவிரவாத இயக்கங்களை உருவாக்குகின்றனர். நாளடைவில் இவ்வியக்கங்கள் நம் நாட்டின் மேல் பகை பாராட்டும் அந்நிய நாடுகளிலிருந்து தூண்டப்படும் பயங்கரவாதத்துக்கு் துணை போகின்றனர். இத்தகைய தீவிரவாதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே மறைந்து வாழ்ந்துகொண்டு அருகிலிருக்கும் ஊர்களில் உள்ள அப்பாவி மக்களை இன்னலுக்குள்ளாக்குவதும், இவர்களிடம் ஏமாந்து மாட்டிக்கொள்ளும் காவல்துறையினர், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முதலானவர்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தங்கள் மேல் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு சிறையிலிருக்கும் தங்கள் குழுவினரை விடுவிப்பதும் இந்தியாவின் பல மாநிலங்களில் அன்றாடம் நடைபெறுவது மிகவும் கவலையளிக்கிறது.

இது வரையில் அரசியல்வாதிகள் யாரும் இத்தகைய தீவிரவாதிகள் கையில் சிக்காமல் தப்பி வந்துள்ளனர். ஆனால் இன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தீவிரவாதிகள் கையில் பணயக் கைதியாக சிக்கியுள்ளார். இந்நிலை தொடருமாயின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுவது உறுதி. நாட்டில் அரசியல் விரைவில் முன்னேறும் எனும் நம்பிக்கையில் இதுகாறும் பொறுமைகாத்து வந்த பொது மக்கள் சமுதாய நலனுக்காகப் போராடுவதையே தம் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பாடுபடும் அன்னா ஹசாரே போன்ற தலைவர்கள் தொடங்கி நடத்திவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம் நாட்டில் வலுவான மக்கள் குறை தீர்க்கும் சட்டங்களும் அவற்றை அமல்படுத்தத் தக்க அமைப்பையும் உருவாக்கக் கோரி வருகின்றனர். இருந்த போதிலும் முறையான வலுவான சட்டங்களை இயற்றவும் மத்திய புலனாய்வுத் துறையை சுதந்திரமாக்கவும் அரசியல்வாதிகள் முன்வராமல் அநிதியான நடைமுறைகளே தொடர்ந்து நிலவும் வகையில் பலவிதமான ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதுடன் மக்களூக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றனர்.

நீதி நிலைபெறுமா? குற்றவாளிகள் அரசாளும் நிலை மாறுமா? மக்கள் நல்வாழ்வு வாழ வழி பிறக்குமா? இவை போன்ற விடை தெரியாத கேள்விகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலவுகையில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகள் மேலும் மேலும் அரசியல்வாதிகளின் முறைகேடுகளையும் பொதுமக்கள் பலர் படும் தீராத துன்பங்களையும் மட்டுமே பெரும்பாலும் வெளியிடும் சூழ்நிலையில் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும், மின்தடையும், தொழில்கள் முடங்கும் நிலையும் இருப்பதால் இன்று நாட்டில் எங்கும் யாரும் அமைதியாக வாழ முடியவில்லை.

குற்றமற்ற அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் பதவிகளில் இருந்துகொண்டு அநீதிகள் புரிந்து வருவதும் நிரந்தர வாழ்க்கை நிலையாகிவிடுமோ எனும் அச்ச உணர்வு மக்கள் மனங்களில் எழுவதை யாரும் மறுக்க இயலாது. இது போன்ற சூழ்நிலை தற்காலத்தில் மட்டுமே நிலவுகிறதா? முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் யாவரும் நீதி தவறாது ஆண்டார்களா? மக்கள் யாவருக்கும் சம நீதி கிடைத்ததா? இவை போன்ற கேள்விகளுக்கு சரித்திரத்தில் விடைகாணலாம்.

உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அது போல் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கும் அரசியல்வாதிகள் மனிதர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களிலிருந்து தப்பித்தாலும் நம் எல்லோரையும் படைத்தும் காத்தும் அழித்தும் உலகை நடத்தும் தெய்வத்தின் தீர்ப்பிலிருந்து என்றும் தப்பிக்க முடியாது. இதற்கு சரித்திரம் சான்று கூறுகிறது

சனி, 24 மார்ச், 2012

கூடங்குளம்


டந்த 7 மாதங்களாக நீடித்துவரும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

கூடங்குளம் போராட்டக் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம், முகிலன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த 200 பேருக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்திருக்கும் போலீஸார், எஞ்சி இருக்கும் முக்கிய உறுப்பினர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன், மைபா. ஜேசுராஜன் உள்ளிட்டோரையும் கைது செய்ய தீவிரம் காட்டினர்.

தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் இடிந்தகரையில் குவிந்தனர். சாலைகளை போலீஸார் சீல் வைத்ததால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும், பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் கடல் மார்க்கமாக போராட்டக் களத்துக்கு வந்தனர்.

சீரடைகிறது நிலைமை...

கூடங்குளத்தில் தற்போது நிலைமை சற்று மாறி இருக்கிறது. 5ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த போலீஸாரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருக்கிறது. செக்-போஸ்டுகளில் நிறுத்தப்பட்டு இருந்த துணை ராணுவப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, போராடும் மக்களிடமும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இடிந்தகரை ஊருக்குள் போலீஸார் நுழைந்து விடாதபடி முன் எச்சரிக்கையுடன், ஊருக்குள் நுழையும் இடத்தில் ஊர் மக்கள் சாலையில் பள்ளம் தோண்டி போட்டிருந்தனர். அத்துடன் கற்களையும் தடிகளையும் முள்ளையும் போட்டு சாலையை மறித்து வைத்திருந்தனர். அதனை எல்லாம் அவர்களாகவே அப்புறப்படுத்திவிட்டனர்.

காலவரையற்ற உண்ணாவிரதம் நீடிப்பு... 


அதேவேளையில், போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்; நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்;

*அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா - ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்; அணுக்கழிவை என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்...

இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கண்டுகொள்ளாத அரசு... 

காலவரையற்ற உண்ணாவிரத்தை உதயகுமாரன் உள்பட 15 பேர் தொடர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பெண்கள், முதியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்துள்ள நிலையிலும், பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடுவதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை.

ஆனால், உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலையை நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தது, கூடங்குளம் மக்களுக்கு சற்றே ஆறுதல் தருவதாக இருந்தது.

உண்ணாவிரதம் இருப்போரில் சில பெண்கள் மிகவும் பலவீனமாக இருபப்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுக்க, மருத்துவக் குழு பரிந்துரைத்தனர். ஆனால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

புஷ்பராயனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தபடி இருப்பதால் தேவையான மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்தினர். உதயகுமாரனின் உடல்நலத்தை பாதுகாக்க உண்ணாவிரத்தத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டது. அவர் அதை ஏற்கவில்லை.
ஏ.டி.ஜி.பி. ஆய்வு...

தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்தார். அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "அணு மின் நிலையப் பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். அதற்காகவே கூடுதலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நிலைமை சீரடைந்ததும் போலீஸார் திரும்ப பெறப்படுவார்கள்," என்றார்.

அவரிடம், 'இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் உதயகுமார்  கைது செய்யப்படுவாரா?' என கேட்டதற்கு, எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி பறந்தார்.

வெள்ளி, 16 மார்ச், 2012

மனித உரிமைகளை மீறி மாபெரும் போர் குற்றம் செய்த இலங்கை அரசுக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்துள்ள  தீர்மானத்தினை ஆதரிக்க சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவோம் இணையங்களில் பிரச்சாரம் செய்வோம் நண்பர்களே.


தமிழனாக பிறந்த ஒவ்வொருவும் இந்த நேரத்தில் இதையாவது செய்வோம் நண்பர்களே. 


மனித தன்மையுள்ள எல்லோரும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தினை ஆதரிப்போம். 

சனி, 10 மார்ச், 2012

விவேகானந்தரின் இந்த தத்துவத்தினை ஒரு பொது கூட்டத்தில் பேசினேன் . அவர் சொன்ன தத்துவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது.